4
வைத்தியன் நாகதத்தனுக்கு ஒவ்வொரு இடத்திலும் மரியாதையான வரவேற்பு கிடைத்தது. அவன் ஒரு ஹிந்து வைத்தியன் என்பது மட்டுமல்ல; தாரயோஷின் குடும்ப வைத்தியனும் கூட. மேலும், வைத்திய சாஸ்திரத்தில் அவன் அற்புதமான திறமை படைத்தவன். பெர்ஸபோலியில் இருக்கும்போதே அவன் கிரேக்க பாஷையைக் கற்றிருந்தான். சோபியா அவனுக்குத் துணையாகவும் அமைந்திருக்கிறாள். அவன் மெக்டோனியாவைப் பார்த்தான். பிலிப் அரசனின் புத்திரன் அலெக்ஸாண்டருடைய குரு அரிஸ்டாட்டலையும் பார்த்தான். நாகதத்தனும் ஒரு சிறந்த தத்துவ ஞானி- ஆனால் இந்திய முறையிலே. ஆகையால் சக்கரவர்த்தி பீடத்தை ஆதரிக்கும் அரிஸ்டாட்டலுடைய கொள்கை பற்றி நாகதத்தனுக்கு அபிப்பிராய பேதம்
உண்டு. இருந்தாலும், அவரிடத்திலே இவனுக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது. “சத்தியத்தின் உரைகல் மூளை அல்ல; உலகப் பொருள் இயற்கைதான்” என்ற அரிஸ்டாட்டலின் சித்தாந்தம் இவனுடைய இதயத்தை மிகவும் கவர்ந்தது. அரிஸ்டாட்டல் அனுபவ உண்மைக்கே மிகவும் உயர்ந்த ஸ்தானம் கொடுத்தான். பாரதீயத் தத்துவ ஞானிகள், சத்தியத்தை இதயத்தில் உற்பத்தி செய்ய விரும்புவதைப் பார்த்த நாகதத்தனுக்கு வருத்தம் ஏற்பட்டது. தன்னுடைய பராக்கிரமசாலியான சிஷ்யனைப் பற்றி, அரிஸ்டாட்டல் அவருடைய வாயால் புகழ்ந்ததை நாகதத்தன் கேட்டிருக்கிறான். இவனும் அந்த சிஷ்யனைப் பலமுறை சந்தித்துப் பேசி இருக்கிறான். அந்த வாலிபன் நிகரற்ற வீரனாயும், எல்லையற்ற திறமை சாலியாயும் இருந்ததைப் பார்த்தான்.
ஏதென்ஸ் நகரத்தைப் பார்த்துவிட்டு வருவதற்கு அரிஸ்டாட்டலிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான் நாகதத்தன். ஆனால், அந்த கிரேக்க நாட்டுத் தத்துவ ஞானியை, அவன் சந்திப்பது அதுதான் கடைசி முறை என்று யாருக்குத் தெரியும்?
பாரத வீரர்களைப் பெற்றெடுத்து, ஜனநாயக ஆட்சியால் வெற்றிப் புகழ் பரப்பி வாழ்ந்த ஏதென்ஸ் நகரத்திலே நாகதத்தன் தன்னுடைய இதயத்திலே தட்சசீலத்திற்கு எவ்வித உயர்ந்த ஸ்தானம் கொடுத்திருக்கிறானோ, அதே மரியாதையோடும் அன்போடும் பிரவேசித்தான். நகரம் திரும்பவும் வாழத் தொடங்கியிருந்தது. ஆனால், பழைய ஏதென்ஸ் நகரம் அல்ல இது என்று சோபியா தெரிவித்தாள். வீனஸ், ஜுபிடர் முதலிய தெய்வங்களின் ஆலயங்கள். இறவாப் புகழ் படைத்த கலைஞர்களின் சிருஷ்டிகளால்
அலங்கரிக்கப்பட்டு, இன்றும் இருந்தன. ஆனால், ஏதென்ஸ் நகர வாசிகளிடத்தில் முந்திய உற்சாகமும் ஜீவகளையும் இப்பொழுது இல்லை என்று அவனுக்குச் சோபியா கூறினாள்.
சோபியாவினுடைய தகப்பனின் வீடு- இல்லை அது இருந்த பூமியில்,
