அக்பர்-“ஹிந்து வாலிபர்கள் தங்கள் மதத்தையும் பெயரையும் மாற்றாமலேயே முஸ்லீம் யுவதிகளை மணந்து கொள்வதைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலேயே இருக்கிறது.”
அபுல்பஜல்-“இப்பொழுது நான் ஒரு சந்தோஷ சமாச்சாரம் சொல்லப் போகிறேன். நண்ப ஜலால்! நம்மால் செய்து முடிக்க முடியாத காரியத்தை, என் மகள் சுரையா செய்து முடித்திருக்கிறாள்.”
எல்லோரும் ஆவலோடு அபுல்பஜலைப் பார்த்தார்கள். “மேலே விவரம் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள்” என்று கூறிவிட்டு, அபுல்பஜல் வெளியே போய்ச் சிறிது நின்று பார்த்துவிட்டுத் திரும்பி வந்து, “கேட்பதைவிடப் பார்ப்பதே நல்லது. என்னோடு வாருங்கள்” என்று கூறி, எல்லோரையும் வெளியே அழைத்துச் சென்றார். காவல் கூடத்திற்கு வெளியே வந்ததும் தூரத்திலே அசோக மரத்தடியில் நின்ற இரண்டு வாலிப உருவங்களைச் சுட்டிக் காட்டி, “அதோ பாருங்கள் எனது சுரையா” என்றார். எல்லோரும் அத்திசையிலே நோக்கினார்கள். உடனே தோடர்மல், “ஓ! என்னுடைய கமல்! நமது உலகம் இருட்டடைந்து விடவில்லை பஜல்!” என்று கூறி, அபுல்பஜலை அப்படியே கட்டித்தழுவிக் கொண்டார். இரண்டு நண்பர்களும் விலகிய பொழுது அவர்களின் கண்கள் நனைந்திருந்தன. அக்பர்-“எத்தனையோ வருட காலமாக இந்த வசந்தோற்சவம் நடைபெற்று வருகிறது. ஆனால், உண்மையான வசந்தோற்சவம் இன்றுதான் நடைபெறுகிறது. அவர்கள் இருவரையும் அழைத்து, அவர்களுடைய உச்சியிலே முத்தமிட வேண்டுமென்ற ஆசை எனக்குண்டாகிறது. அவர்களின் அந்தக் கங்கை-யமுனை-கலப்பை, நாம் மனப்பூர்வமாக வரவேற்கிறோம் என்று தெரிந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள்.”
அபுல்பஜல்-“அவளுடைய இந்தக் காதலை, அவள் தாயும் தந்தையும் பெரிய மகிழ்ச்சிக்குரிய விஷயமென்று கருதுகிறார்களென்பது எனது
சுரையாவுக்குத் தெரிந்திருக்க மாட்டாது.”
தோடர்மல்-“கமலுக்கும் தெரிந்திருக்கமாட்டாது. ஆனால் நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரன் பஜல்! சுரையாவின் தாயும் உன்னோடு ஒத்துழைப்பாள். கமலனின் தாயும், சுரையாவின் தாயும் நெருங்கிய தோழிகள். ஆயினும், கமலனின் தாய் கொஞ்சம் பழங்காலத்து ஆசாமி. அதைப் பற்றிப் பரவாயில்லை. கமலனையும், சுரையாவையும் ஆசீர்வதிக்க நான் துடித்துக் கொண்டிருக்கிறேன்.”
அக்பர்-“அவர்களை முதலில் ஆசீர்வதிக்கும் உரிமை என்னைத்தான் சேர்ந்தது.”
