“இந்திய யுத்த வீரர்களின் வீரத்தை அவர் மிகவும் புகழுகிறார். எங்கள் மூளையின் சக்தியையும் அவர் பாராட்டுகிறார். ஆனால் எங்கள் பழமைப் பற்றும் பழம் பசலிப் போக்கும் தான் இந்தியாவின் பெரிய விரோதி என்று கருதுகிறார். எங்கள் கிராமங்கள், தனித்தனிச் சுதந்திர ஆட்சியை உடைய சிறிய சிறிய குடியரசுகள்!”
“குடியரசுகளா?”
“தேசம் முழுவதுமல்ல, ஒரு ஜில்லா அல்லது இரண்டு கிராமங்கள் சேர்ந்துகூட இல்லை. சிறிய சிறிய தனித்தனிக் கிராமங்கள். அதுவும் எல்லா இடத்திலுமில்லை. லார்டு காரன் வாலிஸ் ஆங்கில முறையைப் பின் பற்றி ஜமீன்தாரி முறையைப் புகுத்திய இடங்களிலெல்லாம், அந்தக் கிராமக் குடியரசு செத்துப் போய்விட்டது. அந்தக் கிராமக் குடியரசுகளை. ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற ஒரு பஞ்சாயத்து நிர்வகிக்கிறது. போலீஸ், நீதி, நீர்ப்பாசனம், கல்வி, மதம் எல்லா வேலைகளையும் அந்தப் பஞ்சாயத்தே கவனிக்கிறது. நேர்மையுடனும், அறிவுடனும், பயமின்றியும் கிராமத்தின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் ஒவ்வொரு மனிதனின் மரியாதையையும் காப்பாற்றுவதற்காகப் பஞ்சாயத்தின் உத்திரவுப்படி கிராமத்தின் ஒவ்வொரு
ஆண்மகனும் தன் உயிரையும் கொடுக்கத் தயாராய் இருப்பான். முஸ்லீம் அரசர்கள் முதலில் டெல்லியைச் சுற்றிச் சிறிது தூரமே அவர்கள் ஆட்சி பரவியிருந்த காலத்தில், தங்களை அந்நிய நாட்டினராகக் கருதிக் கொண்டு, இந்தப் பஞ்சாயத்துகளை அழித்துவிட விரும்பினார்கள். ஆனால் பிற்காலத்தில் அவர்களும் இந்தப் பஞ்சாயத்தின் சுதந்திரத்தையும் சுய ஆட்சியையும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். ஆனால் இந்த ஆங்கிலேயர்கள் முக்கியமாக, இங்கிலாந்தில் ஜமீன்தாரான காரன் வாலிஸ்தான் கிராமக் குடியரசுகளை அழிக்கும் வேலையை ஆரம்பித்திருக்கிறான். அதில் பெரும் பகுதி வெற்றியும் பெற்றுவிட்டான். இல்லாவிட்டால், இவ்வளவு சீக்கிரம் அது அழிந்து போயிருக்காது. மான்செஸ்டர், லங்காஷயர் துணிகளும், ஷெப்பீல்டு இரும்புப் பொருள்களும் இன்னும் இது போன்ற பலபொருள்களும் இங்கிலாந்திலிருந்து அங்கு போய்க் குவிவதுதான் கிராமக் குடியரசுகளின் தலையிலே விழிந்த மகத்தான அடி. 1822 ஆம் வருடம் சூலை மாதம் 1ம் தேதி கல்கத்தாவில் முதன் முதலாக ஒரு நீராவிக் கப்பல் துறைமுகத்தில் வந்து நின்றது; அன்றே இந்தியக் கிராமங்களின் பொருளாதார சுதந்திரத்தின் அடிப்படை அழிந்து போயிற்று. இந்தியாவின் புகழ் பெற்ற மஸ்லின் சுரங்கமான டாக்காவின் மூன்றில் இரண்டு பகுதி இன்று சுடுகாடாய் இருக்கிறது. ஆனீ! கிராமச் சேணியர்களின் நிலைமையைக் கேட்கவே வேண்டாம். கொல்லன், தச்சன், கேணியன், கன்னான் முதலிய எல்லாத் தொழிலாளர்களையும் தன்னகத்தே கொண்டிருந்த காரணத்தால், தனித்து நின்று சுதந்திரமாக வாழ்ந்த இந்தியக்
கிராமங்கள் இன்று அந்தத் தொழிலாளர்கள் கையோடு கையைச் சேர்த்துக் கட்டிக்கொண்டு பட்டினி கிடந்து சாவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் தேவைக்கான பொருள்களை மான்செஸ்டரும் பர்மிங்ஹாமும் ஷெப்பீல்டும் அனுப்பிக்
