அதிகாரம் 23
2 மம்ஸர் என்னப்பட்ட வேசி மகனும் பத்தாம் தலைமுறை வரை அவன் சந்ததியும் ஆண்டவருடைய சபையிலே புகுதலாகாது.
3 அம்மோனியனும் மோவாபியனும் பத்தாம் தலைமுறைக்குப் பிறகு முதலாய் என்றுமே ஆண்டவருடைய சபையினுள் வரக்கூடாது.
4 ஏனென்றால், நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த வழியிலே அவர்கள் அப்பத்தையும் தண்ணீரையும் கொணர்ந்து உங்களுக்கு எதிர்கொண்டுவரவில்லை. மேலும், அவர்கள் உன்னைச் சபிக்கும்படி சீரிய மெசொப்பொத்தாமியாவின் ஊரானும் பேயோரின் புதல்வனுமான பாலாம் என்பவனுக்குக் கையூட்டுக் கொடுத்து அவனை வருவித்தார்கள்.
5 உன் கடவுளாகிய ஆண்டவரோ பாலாமுக்குச் செவிகொடுக்க மனமின்றி உன்மேல் அன்பாய் இருந்து, அந்தச் சாபத்தை உனக்கு ஆசீராக மாற்றிவிட்டார்.
6 நீ உன் வாழ்நாள் முழுவதும் என்றென்றும் அவர்களோடு சமாதானம் செய்து கொள்ளவும் வேண்டாம்@ அவர்களுடைய நன்மையைத் தேடவும் வேண்டாம்.
7 உன் சகோதரனாய் இருப்பதினாலே ஏதோமியனை நீ வெறுக்கலாகாது. நீ எகிப்து நாட்டில் அகதியாய் இருந்ததை நினைத்து, எகிப்தியனை வெறுக்கவேண்டாம்.
8 அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் மூன்றாந் தலைமுறையில் ஆண்டவருடைய சபைக்கு உட்படலாம்.
9 நீ உன் பகைவருக்கு விரோதமாய்ப் போர் செய்யப் புறப்படும்போது, தீமையான காரியங்கள் எல்லாவற்றிற்கும் விலகி இருப்பாயாக.
10 இரவில் வரும் கெட்ட கனவினாலே தீட்டுப்பட்ட ஒருவன் உங்களிடையே இருந்தால், அவன் பாளையத்துக்கு வெளியே போய்,
11 மாலையில் தண்ணீரில் குளித்து, சூரியன் மறைந்த பின்பு மட்டுமே பாளையத்துக்குள் வரக்கடவான்.
12 மலம் கழிக்கத்தக்க ஓர் இடம் பாளையத்திற்குப் புறம்பே உனக்கு இருக்கவேண்டும்.
13 கச்சையில் ஒரு சிறுகோலை வைத்திருக்கக்கடவாய். அதைக் கொண்டு வட்டமாக மண்ணைத் தோண்டி மலசலங்கழித்து, பிறகு உன்னிடமிருந்து கழிந்துபோனதை அந்த மண்ணினாலே மூடிவிடக்கடவாய்.
14 உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைக் காப்பாற்றுவதற்கும், உன் பகைவர்களை உன் கைவயப்படுத்துவதற்கும் பாளையத்தினுள் உலாவுகின்றமையால், அவர் உன் பாளையத்தில் யாதொரு அசுத்தமும் காணாதபடிக்குத் தூய்மையாகவே இருக்கவேண்டும். இல்லாவிடில், அவர் உன்னை விட்டுப் போனாலும் போகலாம்.
15 உன் அடைக்கலத்தைத் தேடிவந்த அடிமையை அவனுடைய தலைவன் கையில் ஒப்புவியாதே.
16 அவன் உனக்குள்ள இடங்களில் தனக்கு வசதியான ஒன்றைத் தேர்ந்து கொண்டு, உன் நகரங்களுள் ஒன்றிலே உன்னோடு இருப்பான். நீ அவனைத் துன்புறுத்தாதே.
17 இஸ்ராயேலின் புதல்வியரிலே விலைமகளேனும், புதல்வரிலே விலைமகனேனும் இருத்தலாகாது.
18 வேசிகள் வாங்கின வேசிப் பணத்தையும் நாயை விற்று வாங்கின பணத்தையும், எவ்வித நேர்ச்சியினாலும் உன் கடவுளாகிய ஆண்டவருடைய ஆலயத்திலே நீ ஒப்புக்கொடாதே. அவை இரண்டையும் உன் கடவுளாகிய ஆண்டவர் வெறுக்கிறார்.
19 கடனாகக் கொடுத்த பணத்துக்கும் தானியத்துக்கும் வேறு எந்தப் பொருளுக்கும் உன் சகோதரன் கையில் வட்டி வாங்கக் கூடாது.
20 அந்நியன் கையில் வட்டி வாங்கலாம். நீ உரிமையாக்கிக் கௌ;ளவிருக்கும் நாட்டிலே உன் கடவுளாகிய ஆண்டவர் உன் வேலையிலெல்லாம் உனக்கு ஆசீர் அளிக்கும் வண்ணம், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காமல், தேவையானவைகளை அவனுக்குக் கடனாகக் கொடுப்பாயாக.
21 உன் கடவுளாகிய ஆண்டவருக்கு நேர்ச்சி செய்திருப்பாயாயின், அதனைச் செலுத்தத் தாமதியாதே. ஏனென்றால், உன் கடவுளாகிய ஆண்டவர் அதை நிச்சயமாய் உன்னிடம் கேட்பார். தாமதம் செய்தால் அது உனக்குப் பாவமாகும்.
22 நீ நேர்ச்சி செய்யாதிருந்தால், அப்பொழுது உன்மேல் பாவம் இல்லை.
23 ஆனால், நீ வாயினால் சொன்னதை எப்படியும் நிறைவேற்ற வேண்டும். உன் கடவுளாகிய ஆண்டவருக்கு வாக்குறுதி கொடுத்தபடியே செய்யவேண்டும். ஏனேன்றால் நீ உன் விருப்பப்படியல்லவா நேர்ச்சி செய்து கொண்டாய் ?
24 நீ பிறனுடைய கொடிமுந்திரித் தோட்டத்திலே புகுந்தபின்பு உன் ஆசை தீரப் பழங்களை உண்ணலாம். ஆனால், அவற்றில் ஒன்றும் எடுத்துக்கொண்டு போகலாகாது.
25 உன் நண்பனுடைய விளைநிலத்தில் புகுந்தால் நீ கதிர்களைக் கொய்து கையால் கசக்கி உண்ணலாம். ஆனால், கதிர்களை அரிவாள் கொண்டு அறுக்கக்கூடாது.
