அதிகாரம் 6
2 என்று நீ எங்களுக்கு முன்னுரைத்தாய் அல்லவா? நபுக்கோதனசார் அன்றி வேறு கடவுள் இல்லை என்பதை நீ அறியும்படி, ஒரு மனிதனைக் கொல்வது போல் இஸ்ராயேலர் அனைவரையும் நாங்கள் வெட்டி வீழ்த்துவோம்.
3 அவர்களோடு நீயும் அசீரியரின் வாளால் கொல்லப்படுவாய். உன்னோடு இஸ்ராயேலர் அனைவரும் கொல்லப்படுவார்கள்.
4 அப்போது நபுக்கோதனசாரே, மண்ணகம் முழுவதற்கும் தலைவன் என்று நீ ஏற்றுக்கொள்வாய். பின்னர் என் படை வீரர் தங்கள் வாளால் உன்னை விலாவிலே குத்த, வெட்டுண்டு விழுந்த இஸ்ராயேலரோடு நீயும் செத்து மடிவாய்.
5 நீ சொன்ன தீர்க்கதரிசனம் உண்மை என்று எண்ணுவாயாகில் ஏன் உன் முகம் வாடவேண்டும்? நான் சொன்னது பொய் என்று நீ நினைத்தால் உன் முகம் ஏன் மாறுபட வேண்டும்?
6 நீ இஸ்ராயேலரோடு அவற்றைப் பட்டு அனுபவிப்பாய் என்பதற்கு முன் அடையாளமாக, இதோ! இப்பொழுதே உன்னை அவர்களோடு சேர்த்து விடுகிறேன். அவ்வாறு அவர்கள் என் வாளுக்கு இரையாகித் தண்டிக்கப்படும் போது நீயும் என் பழிக்கு ஆளாவாய்" என்றான்.
7 அவ்வாறு கூறினவுடன், ஒலொபெர்னெஸ் தன் ஊழியரை நோக்கி, "நீங்கள் ஆக்கியோரைப் பிடித்துப் பெத்தூலியா நகருக்குக் கொண்டு போய் இஸ்ராயேல் மக்கள் கையில் ஒப்படையுங்கள்" என்று கட்டளையிட்டான்.
8 எனவே, ஒலொபெர்னெசின் ஊழியர் அவனைப் பிடித்துக் காட்டு வழியாய் அவனைக் கூட்டிச் சென்றனர். ஆனால் அவர்கள் மலைக்கு அருகே வந்த போது கவணாளர் அவர்களுக்கு எதிரே வந்தனர்.
9 எனவே அவர்கள் மலையடிவாரத்தில் ஒதுங்கி ஆக்கியோரின் கையையும் காலையும் ஒரு மரத்தோடு கட்டி விட்டுத் தங்கள் தலைவனிடம் திரும்பிச் சென்றனர்.
10 அப்போது இஸ்ராயேல் மக்கள் பெத்தூலியாவிலிருந்து ஆக்கியோர் கட்டப்பட்டிருந்த இடத்திற்கு வந்தனர். அவனைக் கட்டியிருந்த கயிற்றை அறுத்து, பெத்தூலியாவுக்குக் கூட்டிக் கொண்டு போயினர். அங்கே அவனை மக்கள் நடுவில் நிறுத்தி, "அசீரியர் உன்னை இப்படிக் கட்டி வைத்ததன் காரணம் யாது?" என்று வினவினர்.
11 அக்காலத்தில் சிமையோன் குலத்தைச் சேர்ந்த மிக்காவின் மகன் ஓசியாசும், கொத்தோனியேல் என்று அழைக்கப்பட்ட கார்மியும் பெத்தூலியா நகருக்குத் தலைவர்களாய் இருந்தனர்.
12 ஆக்கியோர் மக்கள் முன்னிலையில், பெரியோர்கள் நடுவில் நிகழ்ந்தவற்றையெல்லாம் எல்லாரும் கேட்கச் சொன்னான். ஒலொபெர்னெஸ் தன்னிடம் கேட்ட வினாக்களையும், தான் அவற்றிற்குக் கூறிய மறுமொழிகளையும், அவற்றைச் சகிக்க மாட்டாமல் ஒலொபெர்னெஸ் ஆட்கள் தன்னைக் கொல்லக் கருதியதையும் எடுத்துக் கூறினான்.
13 விண்ணகக் கடவுள் இஸ்ராயேலரைப் பாதுகாத்து வருகிறார் என்று தான் சொன்னதைப்பற்றி ஒலொபெர்னெஸ் கோபமுற்று, "ஆ! நான் உன்னை இஸ்ராயேல் மக்கள் கையில் ஒப்படைப்பேன். பிறகு நான் அவர்களை வென்று தண்டிக்கும் போது, அவர்களோடு உன்னையும் பல வித வாதைகளால் வதைத்துக் கொலை செய்வேன்" என்று கூறியதையும் விரிவாய்ச் சொன்னான்.
14 ஆக்கியோர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் உடனே முகம் குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதனர்@ ஒன்றாக அழுது புலம்பவும் ஆண்டவர் திருமுன் மன்றாடவும் தொடங்கினர்.
15 அவர்கள் ஆண்டவரை நோக்கி, "விண்ணிற்கும் மண்ணிற்கும் ஆண்டவரான கடவுளே, அவர்களது செருக்கையும் எமது தாழ்மையையும் பாரும்@ உம் புனிதர்களின் முகத்தைப் பார்த்து உம்மை நம்புகிறவர்களை நீர் கைவிடுவதில்லை என்றும், தங்களையே நம்பித் தங்கள் சொந்த ஆற்றலிலே பெருமை கொள்கிறவர்களையோ நீர் தாழ்வுறச் செய்வீர் என்றும் காண்பித்தருளும்" என்று வேண்டிக்கொண்டனர்.
16 அன்று முழுவதும் மக்கள் இவ்வாறு மன்றாடின பின், அவர்கள் ஆக்கியோருக்கு ஆறுதல் கூறினர்.
17 ஐயா, நீர் எங்கள் முன்னோரின் கடவுளது வலிமையை எடுத்துரைத்ததால் அக்கடவுளே உமக்குத் துணையாய் இருப்பார். அவர்கள் அழிந்து போவதை நீர் உம் கண்ணாரக் காண்பீர்.
18 மேலும் எம் ஆண்டவராகிய கடவுள் தம் ஊழியரான எங்களுக்கு அவ்வித விடுதலை அளித்த பிறகு, எம் மத்தியில் இருக்கும் ஆண்டவர் உம்மோடும் இருப்பார். அதனால், நீரும் உம்மைச் சேர்ந்தவர்களும் உமக்கு விருப்பமான முறையில் எம் நடுவில் குடியிருக்கலாம்" என்றனர்.
19 பின்னர் மக்கள் கலைந்தனர். ஓசியாஸ் அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் அவனுக்கு ஒரு பெரிய விருந்து செய்தான்.
20 குருக்கள் எல்லாரும் விருந்துக்கு அழைக்கப் பெற்றிருந்தனர். நோன்பு முடிந்த பின் எல்லாரும் பந்தியில் அமர்ந்து உணவு அருந்தினர்.
21 அதன்பிறகு மக்கள் எல்லாரும் ஒன்று கூடினர். இஸ்ராயேலின் கடவுளுடைய உதவியை வேண்டி இரவு முழுவதும் சபை கூடிய இடத்திலேயே செபித்துக் கொண்டிருந்தனர்.