அதிகாரம் 8
2 யூதித்தின் கணவனது பெயர் மனாசேஸ்@ இவன் வாற்கோதுமை அறுவடைக் காலத்தில் இறந்து போனான்@
3 அதாவது, வயலில் அரிக்கட்டுகளைக் கட்டுகிறவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் போது, கடும் வெயிலால் தாக்குண்டு தன் நகரான பெத்தூலியாவில் இறந்தான். அங்கேயே தன் முன்னோர்களின் கல்லறையில் அவன் அடக்கம் செய்யப்பட்டான்.
4 யூதித் கைம்பெண்ணாகி மூன்றரை ஆண்டாயிற்று.
5 அவள் தன் வீட்டு மெத்தையில் தனித்த ஓர் அறையைக் கட்டிக் கதவை அடைத்துக் கொண்டு அங்கேயே தன் பணிப் பெண்களுடன் வாழ்ந்து வந்தாள்.
6 அவள் ஓய்வு நாட்களையும் அமாவாசை நாட்களையும் இஸ்ராயேல் வீட்டாரின் திருவிழாக்களையும் தவிர, ஏனைய நாட்களிலெல்லாம் மயிராடை அணிந்து நோன்பு பூண்டிருப்பாள்.
7 அவளோ பார்வைக்குப் பேரழகி. அவள் கணவன் அவளுக்கு மிகுந்த செல்வத்தையும் ஏராளமான ஊழியரையும், ஆடு, மாடு முதலிய சொத்துக்களையும் விட்டுச் சென்றிருந்தான்.
8 அவள் மிகுந்த தெய்வ பயம் உள்ளவள். எனவே எல்லாரிடத்திலும் பேரும் புகழும் பெற்றிருந்தாள். அவளைப் பற்றி இழிவாக யாரும் பேசியது கிடையாது.
9 ஐந்து நாட்களுக்குப் பின் எதிரிகளுக்கு நகரைக் கையளித்து விடுவேன்" என்று ஓசியாஸ் வாக்களித்திருந்ததைக் கேள்வியுற்ற யூதித், குருக்களான காப்ரி, கார்மி என்பவர்களை அழைத்து வரச் சொன்னாள்.
10 அவர்கள் அவளிடம் வந்து சேரவே, அவள் அவர்களை நோக்கி, "ஐந்து நாட்களுக்குள் உங்களுக்கு உதவி கிடைக்காவிடில், நகரை அசீரியருக்குக் கையளிப்பதாக ஓசியாஸ் சம்மதித்தது ஏன்?
11 ஆண்டவரைச் சோதிப்பதற்கு நீங்கள் யார்?
12 இத்தகைய பேச்சு ஆண்டவரின் இரக்கத்தைப் பெறுவதற்குப் பதிலாக, அவருக்குக் கோபத்தையும் வெறுப்பையும் மூட்டி விடும் அன்றோ?
13 நீங்கள் ஆண்டவரின் இரக்கத்திற்குக் கெடு வைத்து உங்கள் மனம் போல் அவருக்கு நாளைக் குறிப்பது ஏன்?
14 ஆண்டவர் பொறுமையுள்ளவராய் இருக்கிறதனால், நாம் மனம் வருந்திக் கண்ணீர் சிந்தி அவரது இரக்கத்தை இரந்து மன்றாடுவதே நமது கடமை.
15 ஏனெனில் மனிதர் அச்சுறுத்துவது போல் கடவுள் மிரட்டுகிறதுமில்லை@ மனிதரைப் போல் சினம் கொள்வதுமில்லை.
16 ஆகையால் அவருக்கு முன்பாக நம்மையே தாழ்த்திப் பணிந்த இதயத்தோடு அவருக்குப் பணிவிடை செய்வோம்.
17 அவர் தமது திருவுளப்படி நமக்குத் தயைபுரிய வேண்டும் என்றும், அதனால் நம் எதிரிகளின் ஆணவத்தைக் கண்டு நமது உள்ளம் எவ்வண்ணம் கலங்கியிருக்கிறதோ அவ்வண்ணமே நமக்கு நேர்ந்துள்ள சிறுமையினின்று நமக்குப் பெருமை உண்டாகச் செய்ய வேண்டும் என்றும் அவரைப் பார்த்து அழுது மன்றாடுவோம்.
18 ஏனெனில் தங்கள் கடவுளைக் கைவிட்டு அந்நிய தெய்வங்களை வணங்கி வந்த நம் முன்னோரின் பாவ வழியை நாம் பின்பற்றியது இல்லை.
19 அந்த அக்கிரமத்தின் பொருட்டு அவர்கள் வாளுக்கும் கொள்ளைக்கும் பகைவரின் நிந்தைக்கும் ஆளானார்கள். நாமோ ஆண்டவரையன்றி வேறு கடவுளை அறிந்தோமில்லை.
20 நாம் தாழ்ச்சியுடன் அவரது உதவிக்காகக் காத்திருப்போம். அவர் நமது இரத்தத்திற்காக நம் எதிரிகளை வதைத்துப் பழிவாங்குவார். நம்மை எதிர்க்கும் எல்லா இனத்தாரையும் நம் கடவுளான ஆண்டவர் சிறுமையாக்கி, ஈனப்படுத்தி விடுவார்.
21 எனவே, சகோதரரே, நீங்கள் மக்களுக்குள் பெரியோர்களாய் இருப்பதாலும், அவர்களது உயிர் உங்கள் கையில் இருப்பதாலும் நீங்கள் ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லி அவர்களைத் திடப்படுத்துங்கள். நம் முன்னோர் உண்மையாகவே தங்கள் கடவுளை வழிபட்டு வந்தனரா என்பதை நிரூபிக்கும் பொருட்டே சோதிக்கப்பட்டனர் என்று அவர்கள் அறிந்து கொள்ளட்டும்.
22 நம் தந்தை ஆபிரகாம் சோதிக்கப்பட்டும், பல துன்பங்களால் புடமிடப்பட்டும் அவர் கடவுளுக்கு நண்பரானார் என்பதை அவர்கள் நினைவில் கொள்ளட்டும்.
23 இவ்வாறே ஈசாக்கு, யாக்கோபு, மோயீசன், இன்னும் கடவுளின் நண்பர்களான அனைவருமே பல துன்பங்களுக்கு இடையில் கடவுளுக்குப் பிரமாணிக்கமாய் ஒழுகினர்.
24 தெய்வ பயத்துடன் சோதனைகளை ஏற்காது பொறுமை இழந்து, முறுமுறுத்துக் கடவுளை இகழ்ந்தவரோவெனில்,
25 எதிரிகள் கையில் இறந்துப்பட்டனர்@ பாம்புகளால் கடிப்பட்டு மடிந்துபோயினர்.
26 ஆகையால் நாம் படுகிற துன்பத்தைப் பற்றி நாமே நம்மைப் பழிவாங்க எண்ண வேண்டாம்.
27 மாறாக நாம் படுகிற வேதனைகள் நாம் செய்துள்ள பாவங்களை விடக் குறைவு என்றும், கடவுள் தம் ஊழியர்களைத் தண்டிக்கிறது போல் நம்மைத் தண்டிப்பது நம்மை அழிப்பதற்கு அன்று நம்மைத் திருத்துவதற்கே என்றும் நம்புவோம்" என்று சொன்னாள்.
28 அதைக்கேட்டு ஓசியாசும் பெரியோர்களும் அவளை நோக்கி, "நீ சொன்னது யாவும் உண்மையே. உன் சொற்களில் தவறு ஏதும் இல்லை.
29 நீயோ தெய்வ பயம் உள்ள புனிதை@ ஆகையால் எங்களுக்காக இப்போது மன்றாடு" என்றனர்.
30 மீண்டும், யூதித் அவர்களை நோக்கி, "நான் உங்களிடம் கூறியது கடவுளிடமிருந்து வந்ததாக நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
31 இதுபோல் நான் இனிச் செய்ய எண்ணியுள்ளதும் கடவுளிடமிருந்தே வந்துள்ளது என நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டுக் கடவுள் என் திட்டங்களை உறுதிப்படுத்துமாறு மன்றாடுங்கள்.
32 இன்றிரவு நீங்கள் நகர வாயில் அருகே நில்லுங்கள். நானோ என் பணிப் பெண்ணோடு வெளியே செல்வேன். நீங்கள் சொன்னது போல் இவ்வைந்து நாட்களுக்குள் ஆண்டவர் தம் மக்களாம் இஸ்ராயேலர் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்று மன்றாடுங்கள்.
33 நான் செய்யவிருப்பதை நீங்கள் அறிய முயல வேண்டாம். பிறகு நானே உங்களுக்கு அதைப்பற்றிச் சொல்வேன். அது வரை நீங்கள் நம் கடவுளான ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொண்டேயிருங்கள்" என்று சொன்னாள்.
34 அதற்கு யூதாவின் அரசன் ஓசியாஸ் அவளை நோக்கி, "நீ சமாதானமாய்ப் போய் வா. நம் எதிரிகளைப் பழிவாங்க கடவுள் உன்னோடு இருப்பாராக!" என்று சொன்னான். பின்னர் அவர்கள் அனைவரும் தத்தம் வீடு திரும்பினர்.