அதிகாரம் 17
2 பொல்லாதவர்கள் பரிசுத்த மக்களினத்தைத் தங்களுக்குக் கீழ்ப்படுத்தி விட்டதாக எண்ணியிருந்த போது அவர்கள் தாமே காரிருளின் அடிமைகளாகவும் நீண்ட இரவின் கைதிகளாகவும் தங்கள் வீடுகளில் அடைபட்டு முடிவில்லாப் பராமரிப்புக்குப் புறம்பாக்கப் பட்டவர்களாய்க் கிடந்தார்கள்.
3 மேலும், மறதியென்னும் இருளடர்ந்த திரையின் பின்னால் தங்கள் மறைவான பாவங்களில் மறைந்து கொண்டதாக எண்ணிக் கொண்டிருந்த அவர்கள், அச்சத்தால் கலங்கி நடுநடுங்கியவர்களாய்க் கொடிய காட்சிகளால் திகிலுற்றுச் சிதறுண்டார்கள்.
4 அவர்கள் பதுங்கிக் கிடந்த உள்ளறைகள் கூட அவர்களை அச்சத்தினின்று காப்பாற்றவில்லை: திகிலூட்டும் பேரொலிகள் அவர்களைச் சுற்றிலும் மருட்டின@ வாடிய முகங்களோடு தோன்றிய துயர ஆவிகள் தென்பட்டன.
5 நெருப்பின் ஆற்றலாலும் வெளிச்சம் கொடுக்க முடியவில்லை@ விண்மீன்களின் ஒளிமிகுந்த சுடர்களாலும் அந்த அச்சந்தரும் இரவின் இருளை நீக்கமுடியவில்லை.
6 தானே பற்றியெரிந்து திகிலுண்டாக்கும் தீயைத் தவிர வேறெதுவும் அவர்கள் முன்னால் தோன்றவில்லை@ அவர்களோ திகில்பிடித்துத் தாங்கள் பார்த்தவை பாராதவற்றினும் நடுக்கந்தருபவை என்று நினைத்தனர்.
7 மந்திரவாதிகளின் மாயங்களெல்லாம் நகைப்புக்குரியனவாயின, அவர்கள் பெருமை பாராட்டிய ஞானம் ஏளனத்துக்குள்ளாயிற்று.
8 ஏனெனில் வருந்தி வாடின உள்ளத்தினின்று அச்சத்தையும் திகிலையும் அகற்றுவதாக வாக்களித்தவர்களே நகைப்புக்கிடமான அச்சத்திற்கு ஆளாகி வருந்தினர்.
9 காட்சியேதும் அவர்களுக்குத் திகிலுண்டாக்காமற் போயினும், மிருகங்கள் கடந்து போவதையும் பாம்புகள் சீறுவதையும் கேட்டுத் திகிலுற்று நடுநடுங்கி மாண்டுபோனார்கள்@ எவ்வகையிலும் தவிர்க்க முடியாத காற்றைக்கூட ஏறிட்டுப்பார்க்க மறுத்தார்கள்.
10 தீயவன் ஒரு பெரிய கோழை, தானே தனக்கெதிராய்ச் சான்று பகிர்கிறான் மனச்சான்றின் குத்தலுக்கு ஆளாகி இடர்களையெல்லாம் மிகைப்படுத்துகிறான்.
11 இனி, அச்சம் என்பது பகுத்தறிவினிடமிருந்து வரும் உதவிகளைக் கைதுறந்து விடுதலே அன்றி வேறன்று.
12 தன் உள்ளத்தில் நம்பிக்கை அற்றுப் போனதால் தான் படும் வேதனைக்குக் காரணம் யாதென்றறியாமல் இன்னும் மிகுதியான துன்பத்திற்கு ஆளாகிறான்.
13 நிற்க, உண்மையிலேயே வலிமை சிறிதும் இல்லாததும், வலிமையற்ற கீழுலகின் ஆழத்திலிருந்து வந்து கவிந்ததுமான இரவு முழுவதும் அவர்கள் யாவரும் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கையில்,
14 சிலவேளைகளில் மாபெரும் பேயுருவங்களால் விரட்டப்பட்டனர்@ சிலவேளைகளில் அறிவிழந்து உள்ளங்குன்றிப் போயினர்@ ஏனெனில் எதிர்பாராத திகில் அவர்களைத் திடீரென ஆட்கொண்டு கலங்க வைத்தது.
15 அங்கிருந்தவன் ஒவ்வொருவனும் கீழே விழுந்தான்@ இவ்வாறு இரும்பால் செய்யப்படாத சிறையில் அடைபட்டுக் கிடந்தான்.
16 உழவுத்தொழில் செய்பவனாயினும் இடையனாயினும், பாலைநிலத்தில் பாடுபட்டு வேலை செய்யும் தொழிலாளியாயினும், அதில் அகப்பட்டுத் தவிர்க்க முடியாத இடுக்கண் அடைந்தான்@
17 ஏனெனில் அனைவரும் காரிருள் என்னும் ஒரே சங்கிலியால் கட்டுண்டனர். சீற்றத்தோடு சுழன்று வரும் காற்றின் ஓசையோ, படர்ந்த கிளைகளிலிருந்து வரும் பறவைகளின் இனிய குரலோ, பெருக்கெடுத்துப் பாய்ந்து வரும் வெள்ளத்தின் தாளமோ,
18 பெயர்த்துத் தள்ளப்பட்டு விழும் பாறைகளின் பேரொலியோ, தாவியோடும் தென்படாத விலங்குகளின் ஓட்டமோ, மிக்க கொடிய மிருகங்களின் கர்ச்சனைக் கதறலோ, மலைகளின் பிளவுகளினின்று கேட்கும் எதிரொலியோ, எதுவாயினும் அது அவர்களை அச்சத்தால் அசைய முடியாமற் செய்து விட்டது.
19 உலக முழுவதும் பட்டப்பகல் போல் ஒளிபெற்றுத் தனக்குரிய வேலையில் அவனவன் ஈடுபட்டிருக்க,
20 எகிப்தியரை மட்டும் அடர்ந்த காரிருள் படர்ந்து கவிந்துகொண்டது, அவர்களை விழுங்கக் குறிக்கப்பட்ட இருளின் சாயல் அது@ ஆயினும் இருளை விட அவர்களே அவர்ளுக்குத் தாங்க முடியாத பெருஞ் சுமையாய் இருந்தார்கள்.